Posts filed under ‘சேகுவேரா’

சே குவரா (CHE GUEVERA)- விவரணப்படம் தமிழில்

மாபெரும் புரட்சி நாயகன் சே வைப்பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கி திரைப்படத்துறையினரின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் ரமேஷ். சே வைப்பற்றி அதிகம் தெரியாதவர்குளுக்கும், சே வை நேசிக்கும் தோழர்களுக்கும் நல்ல விருந்து இந்தப் படம்.

கொடுங்கோலன் ஆட்சியின் கீழிருக்கும் கியூபா வை கைப்பற்ற பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் புரட்சிப்படை உருவாகிறது. பின்னர் பிடலுடன் இணையும் சே குவேராவிடமிருந்துப் படம் தொடங்குகிறது. கியூபா எப்படி பிடல் காஸ்ட்ரோவின் கீழ் அணிவகுத்தது என்பதில் இருந்து, அதில் சே வின் பங்கு பற்றியும், இப்படம் நன்கு விளக்குகிறது. தங்கள் ஆட்சியின் கீழ் கியூபா வந்த பிறகு சே வை கியூபாவின் குடிமகனாக அங்கிகரித்து பின்னர் பல முக்கியப் பொறுப்புகளில் அமரவைக்கிறார் பிடல். தான் வகித்த அனைத்து பொறுப்புகளையும் திறம்பட செய்து முடிக்கும் சே.. ஒரு நிலையில், பெல்ஜியத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் காங்கோ நாட்டுக்கு செல்கிறார். அங்கும் புகழ் பெற்ற கொரில்லா தாக்குதல் படையை உருவாக்குகிறார். அங்கு நடைபெறும் பல்வேறு மாற்றங்களுக்குப் பின்னர் கியூபா திரும்பும் சே, அர்ஜெண்டினாவிருக்கு போக திட்டமிடுகிறார். ஆனால் அங்கு சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரை பொலிவியா செல்லுமாறு பணிக்கிறார் பிடல். அங்கிருந்து பின்னர் அர்ஜென்டினாவிற்கு செல்லமுடியும் என்பதனால் சே சம்மதிக்கிறார்.

பொலிவியாவிலும் தனது கொரில்லாத் தாக்குதலை கையாளும் சே பல்வேறு தோல்விகளையும், இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. இறுதியில் பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார் சே.

ஒரு மாவிரனின் புரட்சியை ஆவணப்படுத்துகிறோம் என்கிற உணர்வுடன் செயல்பட்டு இருக்கிறார் ரமேஷ். படத்தின் தரத்தில் அவரது உழைப்பு தெரிகிறது. திரைக்கதையை படமாக்குவது இயக்குனருக்கு எளிது. ஆனால் கிடைத்த துண்டுப் படங்களை வைத்து திரைக்கதை எழுதுவது என்பது அத்தனை சுலபம் அல்ல. ரமேஷ் அதனை திறம்பட செய்து முடித்திருக்கிறார். சே வைப் பற்றி நிகழ காலம் மனிதர்களின் நேர்காணல்களை இடம்பெறச் செய்து சாதாரண ஆவணப்படம் ஆக்கிவிடுவாரோ என்கிற அச்சத்தோடு படம் பார்க்க உட்கார்ந்தால் அது உங்கள் தவறு என்று முடிவில் புரிய வைக்கிறார் ரமேஷ். சே வின் பேச்சு மற்றும் அவரது தந்தை, மருத்துவர், ஆசிரியர் என சே வின் காலத்தில் வாழ்த்தவர்களின் படத்தொகுப்பை வைத்தே நேர்காணல் அமைத்திருக்கும் விதம் அருமை.

படத்தில் இருந்து இசையை பிரித்து எடுக்க முடியாதவாறு படத்தோடு இசையை கோர்த்திருக்கும் விதம் நம்மை வியப்படைய செய்கிறது. ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளதுப் போன்று அருமையாக இசைகோர்ப்பு நிகழ்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக திரைக்கதை, இசை, படக்கோர்ப்பு என நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது. சே வாழுவம் புரட்சியும் என்கிற ஆவணப்படம். ரமேஷின் உழைப்புக்கும், முயற்சிக்கும் தமிழ் ஸ்டுடியோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

-

இனி ரமேஷுடன் ஒரு நேர்காணல்.

இந்த ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? குறிப்பாக தமிழ்நாட்டிலேயே பல போராளிகள் இருக்கும் போது கண்டம் தாண்டிய ஒரு போராளியை பதிவு செய்யும் எண்ணம் ஏற்பட எண்ணக் காரணம்?

முதலில் இந்த எண்ணம் எனக்கு கல்லூரி மாணவர்களை பார்க்கும்போது ஏற்பட்டது. ஏனா அவங்கதான் நிறைய சே வின் டி-சர்ட் போட்டு இருந்தாங்க. ஒருத்தர் கிட்ட ஏன் சே டி சர்ட் போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப, அவர் ஹாலிவுட் கதாநயாகன் மாதிரி இருப்பதாக சொன்னார். அதே சமயத்தில் ‘சே வாழ்வும் மரணமும்’ என்ற புத்தகமும் கிடைத்தது. இதை படிச்ச பின்னாடி தான் சே வைப் பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற முழுமையான எண்ணம் வந்தது.

அதற்காக நிறைய வீடியோ தேடினோம். எதிர் பாராத அளவுக்குக் கிடைத்தது. நபர்களின் ஒத்துழைப்போடு கதையை உருவாக்கினோம்.

உண்மைதான். தமிழ்நாட்டில் நிறைய போராளிகள் இருக்காங்க. ஆனா அவர்களைப் பற்றிய முழுமையான ஆவனாங்கள் கிடையாது. அது போல, ஆங்கிலத்தில் இருப்பது போல ஆய்வு முறையில் முழுமையான வாழ்க்கை வரலாறு என்பது இங்கே ரொம்ப குறைவு. இதற்கு சிறந்த உதாரணம் சொல்லனும்னா ‘சே வாழ்வும் மரணமும் என்கிற புத்தகம் தான். பகத்சிங்கை பற்றி முதல்ல எடுக்க வேண்டுமென்று என்றுதான் நினைத்தோம். அவரை ஆவணப்படுத்த நிறய உழைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நிறைய நிதியும் தேவை. அது தற்போது எங்களால் முடியாது. அதுமட்டுமில்லாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அனைத்து போராளிகளுமே எங்களுக்கு ஒன்றுதான்.

சே விற்கு குடும்ப உறவுகளோ அல்லது அவருக்கு கிடைத்த உயர்ந்த பதவிகளோ கூட அவரை தேக்கமடைய விடவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல நூறு வியட்நாம்களை உருவாக்குவோம் என்ற சே தான் இந்த நூற்றாண்டின் எகாதிபத்திய எதிர்ப்பின் முதல் குரலாக திகழ்ந்தார்.

சே குவேராவை ஆவணப்படுத்தியபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி இருந்தது?

சே வை ஆவணப்படுத்தும்போது ஆரம்பத்தில் ரொம்ப சிரமப்பட்டோம். மொத்தமாக இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய காட்சிகள் தான் கிடைத்தது. நாங்க எழுதிய திரைக்கதைக்கும் அதுக்கும் துளி கூட தொடர்பு இல்லை. படக் காட்சிகளுக்காக இரண்டரை வருடம் தேடினோம். ஒவ்வொரு சமயத்திலும் சின்ன சின்ன காட்சிகளாக கிடைக்கும். இதை எல்லாம் ஒன்று சேர்த்து கிடைத்தது தான் இந்த படம்.

பொதுவாக தமிழ்நாட்டில் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது? இதற்கு உங்கள் பதில் என்ன? உங்கள் ஆவணப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது?

வரவேற்பு இல்லை என்றெல்லாம் கூற முடியாது. ஆவணப்படத்தை பொருத்தவரைக்கும் இங்கு தொழில்நுட்ப ரீதியாக செய்வது கிடையாது. பொதுவாக வெளிநாடுகளில் குறிப்பாக பி பி சி, டிஸ்கவரி, ஹிஸ்டரி போன்ற சேனல்களில் காட்டும் படங்களை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். எந்த விசயமாக அதை புத்திசாலித்தனமாகவும், அதைப் பற்றிய முழு அறிவுடனும் தான் செய்வாங்க. இங்க அது சுத்தமா இல்ல. தன்னை மட்டுமே சார்ந்து செய்வது ஒன்று, குழுவாக சேர்ந்து செய்தால் இதை நாம குறைக்கவும், தொழில்நுட்ப ரீதியாகவும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

சே வின் ஆவணப்படத்தை பொருத்த வரைக்கும் நாங்க முதல் ப்ரிண்டில் மட்டும் 3000 DVD க்கள் விற்றோம். அதன் பின்பு மாடர்ன் சினிமா மூலமாக வெளிவந்தது எல்ல தரக் கடைகளிலும் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பத்திரிக்கைகளில் வந்த விமர்சனத்தை வைத்தே இதற்கான வரவேற்பை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

ஆவணப்படங்கள் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? அல்லது இந்த சமூகத்துக்கு சொல்ல வருவது என்ன?

ஆவணப்படம் மூலமாக நாங்க சாதிக்க நினைக்கிறது ஒன்னே ஒண்ணுதான். அது மத்தவங்கள படிக்க வைக்கிறதுதான்.

ஆவணப்படங்கள் மூலம் இந்த சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தி விடமுடியும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இதற்கு சிறந்த உதாரணம் சொல்லனும்னா சாதியத்தை பற்றி ஒரு ஆவணப்படம் பண்ணி இருந்தாங்க. அதுல மலம் அள்ளுவதை பற்றி நிறைய காட்சிகள் இருந்தது. நிச்சயமா மலத்தை அள்ளும் மக்கள் அனுபவிக்கும் கொடுமையை பற்றி நீங்க என்னதான் எழுதினாலும், அதுல வரும் ஒவ்வொரு காட்சிகளும், அது எவ்வளவு அருவருப்பும், கொடுரமான சாதிய அடக்குமுறை என்றும் ஆணி அடிச்ச மாதிரி காட்டி இருப்பாங்க. எந்த சந்தேகமும் இல்லாமல் இதுவும் ஒரு மாற்று ஊடகம்தான்.

நீங்கள் இப்போது ஆவணப்பட இயக்குனர் ஆகிவிட்டீர்கள். ஆவணப்படம் அல்லது குறும்படம் பற்றி உங்கள் வரையறை என்ன?

குறும்படத்தை பத்தின எந்த வரையறையும் கிடையாது. அதுல நாம என்ன யோசிக்கிறோமோ அதை செய்ய முடியும். ஆனா ஆவணப்படம் அப்படியல்ல. அது முழுக்க முழுக்க வரலாறு சார்ந்தது. முழுமையான தகவலின் அடிப்படையில் தான் இதை செய்ய முடியும்.

தற்போது தமிழகத்தில் உள்ள ஆவணப்பட அல்லது குறும்பட இயக்குனர்களை உங்களை கவர்ந்தவர் யார்? ஏன்?

உண்மையை சொல்லனும்னா தமிழ்ல நிறைய இருக்காங்க. அவர்களில் என்னை கவர்ந்தவங்க யாரும் இல்லை. ஆங்கிலத்துல சொல்ல முடியும். முதல்ல ‘மைக்கேல் மூர்’ அவர் தான் என்னை மிகவும் கவர்ந்தார். ஆவணப்படத்துக்கு ஒரு வரையறையாக அவரை தான் நான் நினைக்கிறேன். இரண்டாவது ‘ஜான் பிள்கேர்’

உங்கள் அடுத்தக் கட்ட முயற்சி என்ன? இப்போது யாரை ஆவணப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?

இப்ப நாங்க பிடல் காஸ்ட்ரோவைப் பற்றி செய்வதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம். இது ‘சே வாழ்வும் புரட்சியும்’ ஆவணப்படத்தை விட அதிக காட்சிகளும், நிறைய சொல்லப்படாத செய்திகளும் ஆவணப்படுத்த முயற்சி செய்துட்டு இருக்கோம். இப்ப வரைக்கும் அதுக்காக நாங்க சேகரித்து வைத்திருக்கும் காட்சிகள் மட்டும் பதினாலு மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு இருக்கும். பிடலைப் பற்றிய ஆவணப்படம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஒடக்கொடியதாக இருக்கும். அது இந்த ஆண்டு முடிவில் வெளிவரும்.

ஆவணப்படம் எடுக்க விரும்பும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?  உங்களால் முடியுமானால் அவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் தயாரா?

ஆவணப்படம் எடுக்க விருபுபவர்களுக்கு நாங்கள் ஒன்றே ஒன்றுதான் சொல்லணும். எடுக்கப் போற ஆவணப்படத்துக்காக எவ்வளவு ஆவணங்களை படிக்க முடியுமோ முடிந்த வரை தேடி தேடி அதனை ஆவணங்களையும் படிக்க வேண்டும் என்பது மட்டும் தான். முழுமையான ஒரு ஆய்வுப் புத்தகம் எழுதுவது போல அவர்களும் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நிச்சயமா படம் அழகியல் தன்மை இல்லாவிடிலும் கூட சிறந்த படமாக இருக்கும். நிச்சயமாக நாங்கள் வழிகாட்டத் தயாராக இருக்கிறோம்.

thanks to : tamilstudio

அக்டோபர் 26, 2008 at 4:00 மு.பகல் 42 பின்னூட்டங்கள்


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

அண்மைய இடுகைகள்

Blog Stats

  • 185,889 hits

ஓடைகள்

Tweet !

  • அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு…: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s4YL5H 5 months ago
  • Pappappa Vettai Song – வேட்டை: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s2nkiO 5 months ago
  • Why this Kolaveri di ? – ஏன் இந்த கொலைவெறி: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/rK309m 5 months ago
  • அண்ணா நூலகத்தை மாற்றுவதா ?:   source : periyar webvision Share this:StumbleUponDiggRedditLike this:Be the first... bit.ly/s89LHI 6 months ago
  • விண்டோஸ் (7) செவனும் ஏ.ஆர்.ரகுமானும்: விண்டோஸ் 7 ல் இலவச இணைப்பாக வரும் சாம்பில் பாடலையும் காப்பி அடித்துள்ள நமத... http://bit.ly/o68mCm 10 months ago

Follow

Get every new post delivered to your Inbox.